'என்ன அதிசயம் தமிழ் இன்னும் எழுந்துக்கவே இல்ல',மதுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. 'இப்படித் தமிழ் தூங்கியதே இல்லையே. என்ன ஆச்சு??' .
" ஹே தமிழ் எழுந்திரு மணி ஆச்சுப் பாரு. ஏய்..!! என்ன டீ உடம்பு சுடுது?. அப்பவே சொன்னேன் மழைல நனையாதேன்னு சொல்றத கேட்டாத்தானே. இப்பப் பாரு, சரி வா டாக்டர் கிட்ட போகலாம்".
"வேண்டாம். நானே போய்கிறேன். நீ ஆஃபிஸ் போ. இன்னைக்கு முக்கியமான இன்ஸ்டாலேஷன் இருக்கு. ரெண்டு பேரும் போகலைனா மகேஷ் பாவம் தனியா கஷ்டப்படுவான்".
"அதுக்குன்னு உன்ன இப்படியே விட்டுட்டுப் போக சொல்றியா?", கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.
"ஃபீவர் ஒன்னும் அதிகமா இல்ல. நானே எழுந்துப் போறேன். நீ போ", தமிழின் பிடிவாதம் அவளுக்குத் தெரிந்த விஷயம். எனவே, அரை மனதுடன் அறையை விட்டுக் கிளம்பினாள்.
"என்ன மேடம் தனியா வந்திருக்கீங்க??".
"தமிழுக்கு ஃபீவர்". காலையிலிருந்துக் கேட்பவர்களிடம் இந்த பதிலைச் சொல்லிக் களைத்துப் போனாள். அவள் எப்படி இருக்கிறாளோ என்றக் கவலை வேறு. 'ச்சே.. இந்த வேலை வேற சீக்கிரம் முடிய மாட்டேங்குது. மணி என்னாச்சு?அச்சச்சோ ஆறாச்சா??.அவ வேற தனியா இருப்பா'.
"மது நான் கிளம்பறேன். நீ இருந்து ப்ளீஸ் இத கொஞ்சம் முடிச்சிட்டு போயிடு",என்று சொல்லி மகேஷ் கிளம்பிவிட்டான்.
"ம்ம் சரி", 'இந்த மகேஷிற்கு என்ன அவசரம் அதுக்குள்ள கிளம்பிட்டான்'.
"என்ன மது இன்னும் கிளம்பலயா மணி 9 ஆச்சே??", அரவிந்த் கேட்டதும் தான் கடிகாரத்தைப் பார்த்தாள்.
"ம்ம்ம்..போகனும்", இரண்டு வார்த்தையில் விடை சொல்வது குறித்து வேதனைப்பட்டாள். அவனுடன் அவன் இல்லாத போது நிறைய பேச வேண்டும் என் நினைப்பவள் அவனைப் பார்த்தவுடன் இப்படி சொற்களைச் சுருக்கிக் கொள்வது பழக்கமாகிப்போனது.
"தனியாவா??"
"ம்ம்ம்ம்"
" உனக்கு ஆட்சேபனை இல்லேனா நான் அந்தப் பக்கம் தான் போறேன் அப்படியே உன்ன உன் ரூம்ல விட்டுட்டுப் போறேனே".
"இல்ல வேண்டாம்" என்று தான் தொண்டைவரை வார்த்தை இருந்தது. அது எப்பொழுது கரைந்து "ம்ம்ம்ம் சரி" என்றானது என்று அவள் குழம்பினாள்.
'ம்ம்ம் நல்லா தான் இருக்கான். சின்னச் சின்ன வித்யாசங்கள் தான் அப்போதிருந்ததிற்கும் இப்போதைக்கும் ஆனால் அழகான மாற்றங்கள். பேசவே பயப்படுவான் ஆனா இப்போ எவ்ளோ நல்லா ஒரு டீம ஹேண்டில் பண்றான். அவன் அம்மா அப்பாப் பத்திக் கேட்கலாமா வேண்டாம் எதாவது நினைச்சிப்பான்'.
"ம்ம்ம் சொல்லு மது, என்ன அப்படி பார்க்கிற? எதோ சொல்ல வந்த போல இருக்கு".
"இல்லயே. சும்மா தான்", சமாளித்தாள்.
"அப்போ இருந்து பார்த்துக்கிட்டே வந்த, அதான் கேட்டேன்", சிரித்தான்.
'அடப்பாவி, இவ்ளோ நேரம் கவனிச்சுக்கிட்டுத்தான் வந்திருக்கான். இனிமே பார்க்கக்கூடாது', கஷ்டப்பட்டு கழுத்தை ஜன்னலுக்குத் திருப்பினாள், கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான். 'இனிமேலும் இப்படி உட்கார்ந்து இருந்தா இன்னும் எதாவது சொல்லுவான்'.
"ரொம்ப தாங்ஸ்".
"எதுக்கு??"
"எல்லாத்துக்கும் தான்"
"எல்லாத்துக்கும்-னா?"
"எல்லாத்துக்கும்-னா எல்லாத்துக்கும். இப்போ வண்டில கூட்டிட்டு வரதுக்கு அப்பறம்...!! "
"அப்பறம்??"
"பழசெல்லாம் மறந்து என் கூட பழகறதுக்கு..!!", நெடுநாளாக மனதில் வைத்திருந்ததை வார்த்தையில் சொன்னாள். ஆனால் எதிர்பார்த்த பதில் தான் கிடைக்கவில்லை.
"பழசுன்னா, எத?", அவன் வார்த்தைக் கொஞ்சம் கடினப்பட்டிருப்பதை உணர்ந்தாள்.
'அதை எப்படி என் வாயால் சொல்வது? ஒருவேளை, நான் சொல்லி அது அவன் மறந்ததை நானே நியாபகப்படுத்தினா மாதிரி ஆகிடிச்சுனா??ச்சே எப்பப்பாரு இவனால எனக்குக் குழப்பம் தான்...!!' ,கொஞ்சம் கோபமும் வந்தது.
"சொல்லு மது. ஏதோ பழசுன்னு சொன்ன. என்ன பழசு??"
"உனக்கு நிஜமாவே தெரியாது? நான் எத சொல்றேன்னு??",கோபமாகவே கேட்டாள்.
"எனக்கெப்படித் தெரியும் நீ என்ன சொல்லவரன்னு? நீ உன் மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டா, அடுத்தவங்களுக்கென்ன மூக்குல வேர்க்குமா?? நீ தான் சொல்லனும்",சொல்லி சிரித்தான்.
"உன் காதலத்தான் சொல்றேன்", கடைசியில் சொல்லியேவிட்டாள்.
"என் காதலா??", கேட்டவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
'அச்சச்சோ நாம தேவையில்லாம நியாபகப்படுத்திட்டோமா??', குழம்பித் தவித்தாள். 'இனி எதுவா இருந்தாலும் அவனே பேசட்டும்', என அரை நாழிகைக் கழித்தாள். அவன் வாயைத் திறப்பதாகவே தெரியாது போக "என்ன ஆச்சு?" என்றாள்.
"ஒன்னும் இல்ல".
"சொல்லு, நான் எதாவது தப்பா சொல்லிட்டனா??", பதில்லில்லை .
'வாயைத்திறந்துத் தொலையேன்..!! இந்த அழுத்தம் மட்டும் இன்னும் இவன் கிட்ட இருந்துப் போகவே இல்ல..!!' ,மனதுக்குள் திட்டிக்கொண்டு இவளும் மௌனமானாள்.
"உன்னப் பார்த்த இந்த ஆறு மாசத்துல, நான் எப்பவாவது உன்கிட்ட வந்து, என் காதல மறந்துட்டேன்னு சொன்னேனா??", இந்தக் கேள்வியை அவனிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை அவள், என்ன சொல்வதெனத் திணறினாள்.
"இல்ல. ஆனா நீ இப்பவும் என்னக் காதலிக்கறதா காட்டிக்கலையே. அதான் நான் நீ மறந்துட்டன்னு நினைச்சேன்".
"ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ, நான் காதல் சொன்ன விதமும், காலமும் வேணாத் தப்பா இருக்கலாம். ஆனா உன்மேலான என் காதல் தப்பானதில்ல. அப்பறம் ஏன் நான் அதை மாத்திக்கனும் இல்ல மறக்கனும்? உன் மேலான என் காதல் எப்பவும் மாறாது..!!",வேகமாக பேசி முடித்தான்.
"நிறுத்து..!! உன்னத்தான் சொல்றேன் வண்டிய நிறுத்து..!!".
"ஏன்??".
"உன் கிட்ட காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்ல. அதோட எனக்கு உன் கூட வர இஷ்டம் இல்ல. வண்டிய நிறுத்து..!!".
"உனக்கென்ன பைத்தியமா?? நைட் டைம்ல எப்படித் தனியா போவ?"
"உன்ன நம்பியோ, உன் கார நம்பியோ, நான் இந்த வேலைக்கு வரல. எப்படி போகனும்னு எனக்குத் தெரியும். நீ போகலாம்..!!", எதற்குக் கோபப்பட்டாள் என்று இதுவரை அவளுக்கு சொல்லத் தெரியவில்லை.
-வருவாள்..
